வரலாற்றுத் தொன்மை வாய்ந்த பாண்டிய மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாக கருதப்படும் “மீன்”, “வாள்” சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் மன்னாரில் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நானாட்டான் சந்திக்கு அண்மித்த 'வடக்கு வீதி' எனும் இடத்தில் குறித்த நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியைச் சேர்ந்த காணி உரிமையாளர் வீடு கட்டுவதற்காக காணியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தொன்மையான 1904 நாணயக்குற்றிகளும் தொன்மையான மண்பாண்ட எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நாணயக்குற்றிகளில் “மீன்”, “வாள்” சின்னங்கள் பொறிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவருகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தெற்காசியாவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் சின்னமாக “மீன்” விளங்கியதாகவே வரலாறுகள் சான்று பகர்கின்றன.
இதனால் அவை பாண்டியர் மன்னர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
நாணயங்களை மீட்ட காணி உரிமையாளர் குறித்த விடயத்தினை பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரதேச சபையினர் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
அவை நீதிமன்றின் ஊடாக தொல்பொருள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்துள்ளார்.
நாணயக்குற்றிகளை மன்னார் மாவட்ட அரச அதிபர் மோகன்ராஸ் உட்பட்ட அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்